2030 பிஃபா உலகக் கிண்ண போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பன்டினோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெற்று வரும் இம்முறை உலகக் கிண்ண போட்டியில் அணிகளின் எண்ணிக்கை 32 இல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது. அடுத்த உலகக் கிண்ணத்தில் மேலும் 16 அணிகளால் அதிகரிக்கவே பிஃபா திட்டமிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த இன்பென்டினோ, ‘இந்த உலகக் கிண்ணம் முடிவுற்ற பின்னர் தொடர்புபட்ட குழுக்களில் இந்த விடயம் நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படும்’ என்றார்.
‘உலகக் கிண்ணத்தை ஏற்பாடு செய்யும்போது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவுக்கு மாத்திரமன்றி அனைத்து உலகத்திற்குமானதாக ஏற்பாடு செய்ய வேண்டும். உலகக் கிண்ணத்தில் பங்கேற்க அனைத்து நாடுகளும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
2023 உலகக் கிண்ணப் போட்டியை பிரதானமாக ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ நாடுகள் இணைந்து நடத்துகின்றபோதும் உலகக் கிண்ணத்தின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் ஆர்ஜன்டீனா, உருகுவே மற்றும் பராகுவேயில் நடைபெறவுள்ளன. 1930 இல் உருகுவே முதல் உலகக் கிண்ணத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.




