இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரில் நேற்று (28) நடைபெற்ற டிபன்டர்ஸ் கால்பந்து கழகத்திற்கு எதிரான போட்டியில் ரினோன் அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் ரினோன் அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பத்து அணிகள் பங்கேற்றிருக்கும் இந்தத் தொடரில் சீ ஹொக்ஸ் கோல் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளது.
கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற போட்டி ஆரம்பித்த 8 ஆவது நிமிடத்திலேயே ரினோன் சார்பில் அப்தல் பத்தா அஹமட் கோல் பெற்றார். இதன்மூலம் அந்த அணி முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ரினோனில் ஆதிக்கம் நீடித்தது. அந்த 70 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்தியதோடு 90 ஆவது நிமிடத்தில் வைத்து 3ஆவது கோலையும் பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது வாரத்திற்கான கடைசி போட்டியாக இன்று (29) அப்கன்ட்ரி லயன்ஸ் மற்றும் ரெட் ஸ்டார் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி கொழும்பு, சுகததாச அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.




