தகவல்கள் மற்றும் சாட்சியங்களின்றி தனிநபர் தாக்குதல்களை மட்டுமே எதிர்க்கட்சி முன்னெடுக்கிறது

4 Min Read

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான,நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள் பெரும்பாலும் வாய்ப்பேச்சு மற்றும் தனிநபர் தாக்குதல்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும் வலியுறுத்தினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் எதிர்கொள்ள நேரிட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது, அதேபோன்று எந்தவொரு வகையிலும் அதனை நியாயப்படுத்தவும் இயலாது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், சம்பவத்திற்கு முன்னரும், சம்பவத்தின்போதும், அதற்குப் பின்னரும் அவரது நடத்தை மக்கள் நம்பிக்கையை மீறும் வகையில் அமைந்திருந்தது என்றும் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளைத் தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

சபையில் எழுப்பப்படும் கூச்சலினாலோ, தனிப்பட்டத் தாக்குதல்களினாலோ, குரோதத்தனமான வாசகங்களினாலோ உண்மை உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

இன்றும் இங்கு எமக்குக் கேட்க நேரிட்டிருப்பது உண்மையைத் திரிபுபடுத்துதல், தகவல்களைத் தவறாக முன்மொழிதல், அரைகுறை உண்மைகள் மற்றும் அமைச்சரவை அமைச்சரொருவர் மீது வஞ்சகத் தாக்குதலைத் தொடுத்தல் ஆகியவற்றை மாத்திரமே ஆகும். இத்தகைய விடயங்களால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நோக்கம் உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னிருந்தே சிறைச்சாலை முறைமையில் நிலவிவந்த கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்தன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து சிறைச்சாலைத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் இருந்துவந்த போதிலும், தற்போதைய அரசாங்கமே அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் 695 சிறைச்சாலைக் காவலர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 190 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அத்துடன் 18 உதவிச் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வெற்றிடங்களை நிரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்காக வெற்றிடங்களை நிரப்புதல், அத்தியாவசிய உபகரணங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்தல், கொள்முதல் செயன்முறையை ஆரம்பித்தல் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் அவசியம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நஞ்சு வகைகள் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தைத் திருத்துவது உள்ளிட்ட சட்டச் சீர்திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அச்சீர்திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இப்பிரச்சினைகளைப் பொருட்படுத்தவில்லை எனக் கூற இயலாது. சட்டச் சீர்திருத்தம் என்பது ஒரே இரவில் மேற்கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. அதற்குரிய நடைமுறைச் செயன்முறையொன்று இருக்கின்றது. அச்செயன்முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலைகளின் நிலைமையை மேம்படுத்துவதற்காகத் தற்போதைய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பிரதமர் தெளிவுபடுத்தினார். சுகாதார அமைச்சுடன் இணைந்து கைதிகளுக்கும் சிறைச்சாலை ஊழியர்களுக்குமான சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்துதல், உள்நோயாளி மற்றும் நிபுணத்துவ மருத்துவச் சேவைகளை அறிமுகப்படுத்துதல், புதிய சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகலை மேம்படுத்துதல் என்பன அவற்றுள் அடங்குகின்றன.

அத்துடன் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காகச் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் தொழிற்பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, விடுதலையான பின்னர் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களைக் கைதிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

நீதித்துறையில் விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர்,

சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்பவுமே எமக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது.

பல ஆண்டுகளாக நிலவிவந்த முறைமைசார் ஊழல், நிறுவன வினைத்திறனின்மை மற்றும் கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் காரணமாகச் சீர்குலைந்திருந்த நீதித்துறை முறைமையுடனேயே தற்போதைய அரசாங்கத்திற்குப் பணியாற்ற நேரிட்டுள்ளது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இத்தகைய ஊழல் நிறைந்த முறைமையொன்றை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. இச்சம்பவமும் கடந்த காலத்தில் சிறைச்சாலை முறைமை எவ்வாறு இயங்கியது என்ற பரந்த பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஊழல் நிறைந்த முறைமையைக் கட்டியெழுப்பும் பொறுப்பே நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்காக நிறுவனத்திற்குள்ளேயே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அது இலகுவான காரியமல்ல. இருப்பினும் இந்த அரசாங்கம் அச்சவாலை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சியினர் இதுவரை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தகவலையோ அல்லது சாட்சியங்களையோ முன்வைக்கத் தவறிவிட்டனர். ஆகையினால், இது வெறுமனே வாய்ப்பேச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் அவதூறு மட்டுமே என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இது நீதித்துறை முறைமை பற்றிய விடயம் அல்ல அரசாங்கமும் அமைச்சும் நடைமுறைப்படுத்தி வரும் சீர்திருத்தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு அரசியல் முயற்சியும், கவன ஈர்ப்பிற்கான பிரயத்தனமும் மட்டுமே ஆகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *