பிணையில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிக்கான சரியான பங்கை வகிக்க முடியுமா?:

1 Min Read

“பிணையிலும் சந்தேகத்தின் பேரிலும் இருப்பவர்களால் எதிர்க்கட்சியின் சரியான பங்கை வகிக்க முடியுமா?” என இணைந்த எதிர்க்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் நிலுக்ஷ குமார கேள்வி எழுப்பியுள்ளார்.காலிப் பகுதியில் அண்மையில் கூட்டம் ஒன்றை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிக் குழுவினர் குறித்து, தெரிவித்திருந்தபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.இதுபற்றி கொழும்பில் நேற்று கருத்துத் தெரிவித்த அவர்; ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிலர் ஒன்றாக இணைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர்.

குறிப்பாக, பசில் ராஜபக்ஷ மீது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சுமத்திய குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டிய நிலுக்ஷ குமார், “கெரம் போர்டுகளை” நாட்டிற்குள் கொண்டுவந்தவர் வெளியிலும், அதனை விநியோகித்தவர் சிறையிலும் இருப்பதாக எதிர்க்கட்சியினரே பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொள்வதை வெளிப்படுத்தினார்.”தெய்வமே, எங்களைக் கைது செய்கிறார்கள்; ஒன்றுதிரண்டு இதைத் தடுப்போம்” என்ற மனநிலையிலேயே இந்தக் குழுவினர் தற்போது செயற்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.நாட்டில் கோதுமை மா விலை உயர்வு போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்கவில்லை. மாறாகத் தங்களது சொந்த அரசியல் மற்றும் சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே மக்களை முன்னிறுத்தி இவர்கள் நாடகமாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.அரசியலமைப்பின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் பதவிக் காலம் நீடிக்கப்படுவதால், சட்டத்தின் பிடி இறுகித் தங்களுக்கான தண்டனை உறுதிசெய்யப்படும் என்ற அச்சத்திலேயே பிணையில் உள்ள இந்தக் குழுவினர் கூச்சலிட்டு வருவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *