ஊவா மாகாணத்தின் திறமைமிக்க கிராமிய மற்றும் சிறு அளவிலான உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து, அவர்களின் வீட்டுப் பொருளாதாரத்தைச் சக்திமிக்கதாக மாற்றுவதை நோக்கக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஊவா குட் மார்க்கெட்” (Uva Good Market) வர்த்தகக் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை இன்று (24) பதுளை சேனாநாயக்க மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
ஊவா மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி இன்று ஜூலை 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
இன்றைய தொடக்க விழா நிகழ்வு, ஊவா மாகாணப் பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகரவின் எண்ணக்கருவிற்கு அமைய, பிரதம செயலாளரின் வழிகாட்டலில் “ஊவா மாகாண தொழில்முனைவோருக்கு பெருமைமிக்க நாளை” எனும் கருப்பொருளின் கீழ் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது:
ஊவா மாகாண தொழில்முனைவோரின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், அவர்களின் தயாரிப்புகளை நுகர்வோர் எளிதாகப் பெற்றுக்கொள்ளவும் ஏதுவாக, இக்கண்காட்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 3 நாட்கள் நடத்துவதற்கு பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
பதுளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




