வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையாக உள்ள வரிப்பணத்தை அறவிடுவதற்கு மாவட்ட நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
வரி செலுத்தத் தவறிய மதுபான நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிகளை அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குறித்த நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவைப் பணத்தை மீட்பதற்கான சட்ட நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார ரீதியான சவால்களுக்கு மத்தியில், பெருமளவிலான வரிப்பணத்தை ஏய்ப்பு செய்துள்ள நிறுவனங்களுக்கு எதிராக, நாட்டின் நிதி நிலைமை மற்றும் பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.




