தன் மகனுக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதாக முன்னாள் தலைமைத் தளபதியான காடி ஐசன்கோட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெறிமுறைகளுக்கு மாறாக, பதற்றமான ஒரு பகுதியில் உள்ள தன் மகனான அவ்னர் நெதன்யாகு உள்ளிட்ட படையினரை நிலகீழ் பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு உத்தரவிட தன்னை நெதன்யாகு வற்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது முறையற்ற விதத்தில் தலையிட்டு, தன் மகனைப் பாதுகாக்க பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதியான காடி ஐசன்கோட் போட்டியிட உள்ளார். அவரே இக்குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இச்சம்பவம் 2015 மற்றும் 2019 இற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அவர் மேலும் குறிப்பிடுகையில், நெதன்யாகு தன்னை ஒரு அவசர சந்திப்புக்கு அழைத்ததாகவும், அப்போது கோலன் குன்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீரர்களை நிலகீழ் பதுங்கு குழிகளுக்குள் செல்ல உத்தரவிடவும் கோரினார்.
அந்தக் காலகட்டத்தில் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, சிரியா மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலுள்ள கோலன் குன்று பகுதியில் போர்க்கள உளவுத் தகவல் சேகரிக்கும் பிரிவில் பணியாற்றி வந்தார்.
அச்சமயம் , நான் நெதன்யாகுவிடம், பொதுமக்களுக்கும் வீரர்களுக்கும் தொடர்ச்சியான ஆபத்து உள்ளது, அதனால் இது செய்ய வேண்டிய சரியான காரியம் அல்ல என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.டெலிகிராப்




