கந்தளாய் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் வீட்டில் இருந்து கொண்டுவந்த விதைபோன்ற உணவை பகிர்ந்து உண்டதையடுத்து அப்பாடசாலையின் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்ற (20) காலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டில் இருந்து கொண்டு வந்த விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.
இதன்பின்னர் குறித்த விதையினை உண்ட அனைவரும் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது இதில் 20 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர்.
இவர்களில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவனின் தனது உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சூரியகாந்தி விதைகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலைக்குக் கொண்டு வந்து ஏனைய மாணவர்களுக்கும் பகிர்ந்து உண்டுள்ளார்.
இன்றைய தினம் அதேபோன்ற விதைகளைக் கொண்டுவந்து சகமாணவ நண்பர்களுக்கும் கொடுத்து சாப்பிட்டுள்ளார். அதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
குறித்த விதைகள் ஆமணக்கு விதைகளாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. கந்தளாய் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




