காங்கோ ஜனநாயகக் குடியரசில் குறைந்தது 131 பேரின் உயிரைப் பறித்த எபோலா நோய்ப் பரவல், முதலில் நினைத்ததை விட வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார முகமை எச்சரித்துள்ளது.
ஆயிரம் கடந்த எண்ணிக்கை
உலக சுகாதார முகமை எவ்வளவு அதிகமாக ஆய்வுகளை முன்னெடுக்கிறதோ, அந்த அளவிற்கு நோய்த்தொற்று மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது என்பது தெளிவாகிறது என்று டாக்டர் ஆன் அன்சியா பிபிசியிடம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும் 513-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்டை நாடான உகாண்டாவில் எபோலா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஆனால் லண்டனைச் சேர்ந்த MRC உலகளாவிய தொற்று நோய் பகுப்பாய்வு மையம் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில்,
கணிசமான அளவில் நோய்த்தொற்றுகள் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்றும், ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்த நோய்ப் பரவலை சர்வதேச அவசரநிலையாக அறிவித்த WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நோய் பரவலின் வேகம் மற்றும் அதன் அளவு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தற்போதைய இந்த எபோலா பரவலுக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்ற நிலையில், வேறு மருந்துகள் பாதுகாப்பு அளிக்கக்கூடுமா என்பதை உலக சுகாதார முகமை மதிப்பிட்டு வருகிறது.
இந்த நிலையில், பல ஆப்பிரிக்க நாடுகள் எல்லைச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியும், சுகாதார வசதிகளைத் தயார்படுத்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அண்டை நாடான ருவாண்டாவும், காங்கோவுடனான தனது எல்லைகளை மூடியுள்ளது. எபோலா ஒரு வைரஸால் ஏற்படுகிறது மற்றும் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற சளி காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், மேற்கு ஆப்பிரிக்காவில் 28,600-க்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நோய், கினியா, சியரா லியோன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல நாடுகளுக்குப் பரவி, முதலில் அடையாளம் காணப்பட்ட 1976 முதல் இதுவரை 11,325 பேர்கள் இறப்புக்கு காரணமாகியுள்ளது.



