ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனிய கிராமங்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியதோடு இரண்டு பள்ளிவாசல்களுக்குத் தீ வைத்ததாக பலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நப்லுஸ் நகருக்குத் தெற்கே உள்ள குஸ்ரா நகரின் மேயர் அப்தெல் அஜிம் வாடி கூறுகையில், நகரின் தெற்குப் பகுதியில் கட்டப்பட்டு வந்த ஒரு மசூதிக்குக் குடியேறிகள் தீ வைத்ததாக ஏ.எப்.பி யிடம் கூறினார்.
இத்தீயினால் மசூதியின் நுழைவாயில் பெரிதும் சேதமடைந்ததோடு அதன் கற்களிலான வேலைப்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
மசூதியொன்றுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, குஸ்ராவின் புறநகர்ப் பகுதிகளுக்குப் படைகள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, துல்கரேமுக்கு அருகிலுள்ள கோர் கிராமத்தில் இஸ்ரேலிய குடியேறிகள் மற்றொரு மசூதிக்குத் தீ வைத்து, அதன் சுவர்களில் இனவெறி வாசகங்களை எழுதியதாக பலஸ்தீன மத விவகாரங்கள் அமைச்சு கூறியுள்ளது.
ரொய்ட்டர்ஸ், அரப் நியூஸ்




