சவுதி அரேபியாவில் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பங்கள், வேல்ஸ் இளவரசரின் வருகையின் போது தங்கள் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் எழுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்புமுனை
இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் பட்டத்து இளவரசர் வில்லியம் திங்கட்கிழமை அன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சவுதி அரேபியாவிற்கு வருகை தருகிறார்.

சவுதி அரேபியா ஒரு முழுமையான முடியாட்சி, அரசியல் மற்றும் சிவில் சுதந்திரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற நாடு. பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல்கள் குறித்த ஏராளமான புகார்களுக்கு அந்த நாடு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில், யூசெஃப் அல்-மனாசிஃப் மற்றும் ஜவாத் குரைரிஸ் ஆகியோரின் வழக்குகள் சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச ஊடகங்களால் தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய ஒரு அரச குடும்பத்து வாரிசின் வருகை தங்களுக்குத் தேவையான திருப்புமுனையை வழங்கும் என்று அவர்களின் குடும்பங்கள் தற்போது நம்புகின்றன.
யூசெஃப் தனது 15 முதல் 17 வயதுக்குட்பட்ட காலத்தில் போராட்டங்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஜவாத் 13 வயதில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனைகளை உறுதிப்படுத்தினால், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் உடனடி ஆபத்து உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு, சவுதி அரேபியாவில் சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை மீண்டும் பகிரங்கமாகத் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தபோது போராட்டங்கள் தொடர்பான குற்றங்களைச் செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
யூசெஃப் மற்றும் ஜவாத் இருவரும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது. சன்னி சவுதி அரச குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகவே எதிர்ப்பு நிலவி வரும் ஒரு பகுதி அதுவாகும்.

சுயநினைவை இழந்து
மேலும், கடந்த 2011 மற்றும் 2012ல் அரபு புரட்சியின் போது, இவர்கள் சிறார்களாக இருந்தபோது கலந்துகொண்ட போராட்டங்களாகும். யூசெஃப் 15 வயதில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டது தொடர்பான குற்றங்களுக்காக 2017 ஆம் ஆண்டு, 20 வயதில் கைது செய்யப்பட்டார்.
தற்போது 29 வயதாகும் யூசெஃபிற்கு அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் கைதுக்கு பின்னர் ஐந்து மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.
அவரது காயங்கள் மிகவும் கடுமையானதாக இருந்ததால், அவர் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
போராட்டங்களில் பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஜவாத் 2020-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 13 வயது மட்டுமே இருந்தபோது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜவாத் சுமார் ஒன்பது மாதங்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மரண தண்டனை விதிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது அவருக்கு வயது 28. இந்த நிலையிலேயே, அந்த இருவரின் குடும்பங்கள் இளவரசர் வில்லியம் இந்த வழக்கில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளனர்.




