ஈரானின் முக்கிய ராணுவ பிரிவான IRGCயை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது.
IRGCயை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த EU
ஈரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சுமார் 6,000க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும், 40,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அடக்குமுறைகளின் பின்னணியில் ஈரானின் முக்கிய ராணுவ பிரிவான ஈரானிய புரட்சிகர காவல் படை(IRGC) இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது ஐரோப்பிய ஒன்றியம் இந்த IRGC அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் எஸ்தோனிய பிரதமரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவருமான காஜா கலாஸ்,”அடக்குமுறைக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்க முடியாது.
இந்த நவடிக்கை, அல்-கொய்தா, ஹமாஸ் மற்றும் ஐஎஸ் (ISIS) போன்ற அமைப்புகளுக்கு இணையான ஒரு பயங்கரவாத அமைப்பாக IRGCயை மாற்றும்” என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், “செய்யப்பட்ட குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
IRGC
ஏற்கனவே அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
தற்போது 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது ஈரானுக்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ” ஐரோப்பிய ஒன்றியம் மற்றொரு பெரிய மூலோபாய தவறைச் செய்கிறது.
எங்கள் பிராந்தியத்தில் முழுமையான போர் வெடிப்பதைத் தடுக்க பல நாடுகள் தற்போது முயற்சி செய்கின்றன. ஐரோப்பா அதற்கு பதிலாக தீயை மூட்டுவதில் மும்முரமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர், ஈரானின் இறையாண்மை மற்றும் இஸ்லாமிய தலைமையை பாதுகாக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு ராணுவத்தின் அதிகாரபூர்வ முதன்மை பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது.
IRGC என்பது அதன் சொந்த தரைப்படைகள், கடற்படை, விமானப்படை, உளவுத்துறை மற்றும் சிறப்புப் படைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுதப் படையாகும். இது அணுசக்தி நிலையங்கள் மீதான பாதுகாப்பையும் தன்வசம் வைத்துள்ளது.
இந்த அமைப்பில் சுமார் 1,25,000 பேர் உள்ளனர். லட்சக்கனக்கனோ தன்னார்வலர்களாக அங்கம் வகிக்கும் பாசிஜ் பிரிவையும் இது கட்டுப்படுத்துகிறது.
மேலும், மத்திய கிழக்கில் செயல்படும் ஹெஸ்பொல்லா, ஹவுத்தி உள்ளிட்ட கிளர்ச்சி அமைப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.




