நேபாள அனர்த்த மரணம் 734 ஆக அதிகரிப்பு; திபெத்திலும் 16 பேர் பலி; 3,000 பேரை காணவில்லை

3 Min Read

– துண்டிக்கப்பட்ட எல்லைக் கிராமங்கள்
– நீர்மின் சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ள ஊழியர்கள்

இமயமலைப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நேபாளத்தில் மாத்திரம் குறைந்தது 734 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 2,400 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேவேளை, திபெத் எல்லைப் பகுதியில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 546 பேர் வரை காணாமல் போயுள்ளதாகச் சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இமயமலையின் ‘லாங்டாங் லிருங்’ சிகரத்திற்கு அருகில் ஏற்பட்ட உறைபனிச் சரிவே (Glacial Collapse) இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்த உறைபனி உடைப்பின் தாக்கமானது 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேரழிவினால் திரிசூலி மற்றும் போதே கோசி நதிகளில் பாய்ந்த வெள்ளம் மற்றும் சேற்றுடன் கூடிய கழிவுகள் சுமார் 100 கிலோமீற்றர் தூரம் வரை அதிவேகமாக அடித்துச் செல்லப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் தங்கியிருந்த பல கிராமங்களை முற்றாகச் சீரழித்துள்ளன.

குறிப்பாக, வடமேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நீர்மின் உற்பத்தி நிலையங்களின் கேபிள் மற்றும் பிரதான சுரங்கப்பாதைகளுக்குள் (Hydropower tunnels) இறுக்கமான சேறு நிறைந்துள்ளதால், உள்ளே பணியாற்றி வந்த பல ஊழியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்பதற்காகப் பொலிஸாரும் இராணுவத்தினரும் சுரங்கப்பாதைகளில் துளையிட்டுத் தீவிர தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக மீட்புப் பணிகள் அவ்வப்போது தற்காலிகமாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நேபாளத்தின் கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பது ‘மிகவும் சவாலானதாக’ மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் லிலா பீட்டர்ஸ் யஹியா தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வான்வழியாக அனுப்பப்பட்டு வருவதுடன், ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது விசேட மீட்புக் குழுக்களையும் நிபுணர்களையும் இந்த மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளன. அமெரிக்கா இந்த அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 3.6 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை அறிவித்துள்ளதுடன், பிரித்தானியா தனது நாட்டுப் பிரஜைகளுக்கு உதவ அவசரப் பிரிவொன்றை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது.

இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உலக வெப்பமயமாதல் காரணமாக உறைபனி அடுக்குகள் மிக வேகமாக உருகி வருவதே இத்தகைய திடீர் அனர்த்தங்களுக்கு முதன்மைக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் பனி உருகும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், பனிமலைகள் பலவீனமடைந்து நிலச்சரிவுகள் மற்றும் உறைபனி ஏரி உடைப்புகள் அதிகரித்து வருகின்றன.

இப்பகுதியில் அடுத்த திங்கட்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கையுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரித்துள்ளமையால், சேற்று நிலச்சரிவுகள் மேலும் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, திபெத் எல்லையிலுள்ள கியிரோங் துறைமுகம் ஊடாகப் புனித கைலாச மலைக்கு யாத்திரை சென்ற 261 வெளிநாட்டவர்கள் திபெத் பகுதியில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது உறவினர்களின் நிலையை அறியாது தவிக்கும் குடும்பத்தினர், சீனா மற்றும் நேபாள அரசாங்கங்கள் இணைந்து துரித தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *