சுவிட்சர்லாந்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டதோடு ஐவர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரிலிருந்து மேற்கே சுமார் 46 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆரெவ் நகரில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். காயமடைந்துள்ளவர்கள் 24 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குதிரைப் பந்தயத் திடலொன்றில் இடம்பெற்ற டெக்னோ ரேவ் உபசார விருந்து வைபவத்தில் இத்துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடந்ததாக ஏற்பாட்டாளர்களும் கலைஞர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 02:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை மேற்கொண்ட குற்றவாளியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், பிரதேசத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பி.பி.சி




