இலங்கை வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயமான 1983 ‘கறுப்பு ஜூலை’ இனப்படுகொலையின் 43-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படுகிறது.
1983 ஜூலை 23-ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தூண்டுதலாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக இந்த வன்முறைகள் திட்டமிட்ட முறையில் ஏவிவிடப்பட்டன. இந்தக் கலவரம் தன்னிச்சையான மக்கள் எழுச்சி அல்ல; மாறாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தினால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கையாகும்.
அன்றைய அமைச்சரவையில் இருந்த சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்களும் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் வன்முறைக் கும்பல்களை நேரடியாக வழிநடத்தியதாகப் பல வரலாற்று ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் வசமிருந்த வாக்காளர் இடாப்புகளைக் கொண்டு தமிழர்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் துல்லியமாக அடையாளங் காணப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன.
வன்முறைகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, கலவரத்திற்குச் சில நாட்களுக்கு முன்னரே ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், “யாழ்ப்பாண மக்களின் கருத்துப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை; வடக்கில் எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
கலவரத்தின் உச்சக்கட்டமாக, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் படுகொலை செய்யப்பட்டனர். இந்த ஒரு வார காலக் கோர தாண்டவத்தில் 3,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சுமார் ஒன்றரை இலட்சம் பேர் சொந்த இடங்களை இழந்து அகதிகளாகினர். சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. நான்கு தசாப்தங்கள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ அல்லது முறையான இழப்பீடோ வழங்கப்படவில்லை என்பது நீதிக்கான போராட்டத்தில் பெரும் சவாலாகவே நீடிக்கிறது. இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் இன்றைய நாளில், மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகாத உறுதிப்பாட்டை எட்ட வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.




