சர்ச்சைகளுடன் உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றில் களமிறங்கிய அமெரிக்க அணியை 4–1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதிப் போட்டியில் ஐரோப்பிய சம்பியன் ஸ்பெயின் உடன் பலப்பரீட்சை நடத்த தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணி தனது 16 அணிகள் சுற்றில் போர்த்துக்கல்லை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
போர்த்துக்கல் அணியின் இந்தத் தோல்வி மூலம் அந்த அணியின் நட்சத்திர வீரரான 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்தது. இதுவே தனது கடைசி உலகக் கிண்ணம் என்று அவர் ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை நடத்தும் அமெரிக்க அணியின் முன்கள வீரரான பெலரின் பலோகனின் ஒரு போட்டித் தடையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் இடைநிறுத்திய சர்ச்சைக்குரிய முடிவுடனேயே அமெரிக்கா இலங்கை நேரப்படி நேற்று (07) பெல்ஜியத்தை எதிர்கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலையீட்டை அடுத்து பலோகனின் தடையை இடைநிறுத்திய சம்பவம் கால்பந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சியாட்டலில் நடந்த இந்தப் போட்டியில் பலோகனுடனேயே அமெரிக்க அணி களமிறங்கியது. என்றபோதும் பெல்ஜியத்தின் ஆதிக்கத்தை அந்த அணியால் முறியடிக்க முடியவில்லை. ஆறாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்த பெல்ஜியம் முதல் பாதியில் 2–1 என முன்னிலை பெற்றது. அந்த அணி இரண்டாவது பாதியில் மேலும் இரு கோல்களை புகுத்தி போட்டியை நடத்தும் மூன்றாவது மற்றும் கடைசி நாடாக அமெரிக்காவையும் இம்முறை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றியது. ஏற்கனவே போட்டியை நடத்தும் நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ அணிகள் தமது 16 அணிகள் சுற்றுப் போட்டியில் தோற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் அணி கடைசியாக ஆடிய நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியுள்ளது. எனினும் அந்த அணி அதிகபட்சம் 2018 உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பெல்ஜியம் அணி இலங்கை நேரப்படி எதிர்வரும் சனிக்கிழமை (11) இங்கில்வூட்டில் நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஆர்லிங்டனில் நேற்று நடைபெற்ற போர்த்துக்கலுக்கு எதிரான போட்டியில் போட்டியில் முழு நேரம் முடியும் மேலதிக நேரத்தில் மாற்று வீரராக வந்த மிகேல் மரினோ புகுத்திய கோலே ஸ்பெயின் அணிக்கு வெற்றி தேடித் தந்தது. ஸ்பெயின் அணி உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேறுவது இது ஆறாவது முறை என்றபோதும் 2010இல் அந்த அணி உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் காலிறுதிக்கு தகுதி பெறுவது இது முதல் முறையாகும்.
போர்த்துக்கல்லை காலிறுதிக்கு அழைத்துச் செல்லும் ரொனால்டோவின் முயற்சி வீணான நிலையிலேயே உலகில் அதிக சர்வதேச கோல்கள் (146) பெற்று அதிக சர்வதேச போட்டிகளில் (233) ஆடியுள்ள ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.




