நீர்கொழும்பு சிறையில் இருந்து பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி திடீர் மரணம்

1 Min Read

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (08) முற்பகல் 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்தும், ஏனைய சிறைச்சாலைகளில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,033 கைதிகள் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக 27 உயிர்கள் பலியாகியுள்ளதுடன், அவர்களில் 7 பேர் சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஆவர்.

அத்துடன் காயமடைந்த சுமார் 100 பேரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் தற்போது பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், மோதலில் ஈடுபட்ட கைதிகள் சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *