நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தொல்லியல் சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டுமென, தமிழரசுக் கட்சி எம்.பி ப. சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள தொல்லியல் சட்டத்தின்படி, நூறு வருடங்கள் பழமையானதென அமைச்சர் எதனை கருதினாலும் அதனை தொல்லியலாக அறிவிக்க முடியும் என்ற நிலையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.தனியார் காணியில் இருந்தாலும் அதனை அரச சொத்தாக மாற்றும் வகையில் தற்போதைய சட்டம் இருப்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், அந்த சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்; தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவை மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் திணைக்களங்களாகவே, தமிழ் பேசும் மக்கள் பார்க்கின்றனர்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. நீண்ட வரலாற்றிலும் ஏன்,இப்போதுங்கூட எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் முக்கிய கருவிகளாக இந்த திணைக்களங்கள் உள்ளன.எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ சொந்தமான திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் இருக்க முடியாது. அந்த திணைக்களத்தின் சட்டத் திருத்தத்தை நாம் வரவேற்கின்றோம். அந்த திணைக்களத்தின் சின்னத்தில் விகாரையொன்றே காணப்படுகிறது.நாட்டில் யுத்தம் முடிவடைந்து மக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால் இந்த அடிப்படை அம்சங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.அத்துடன் தொல்லியல் என்பதன் வரைவிலக்கணத்திலும் குழப்பங்கள் உள்ளன.




