உரிமை, கல்வி மற்றும்​ சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்

1 Min Read

உரிய வாய்ப்பு வழங்கப்பட்டால் மாற்றுத்திறனாளி மாணவர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும். எனவே மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து செயலாற்றுவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சரசவி திரியோ அபிமன்” – மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்,

உங்களுடைய மாற்றுத்திறன் உங்கள் கனவுகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. உங்களிடம் இருக்கும் திறமையும் விடாமுயற்சியும் தான் உங்கள் மிகப்பெரிய பலம். கல்வியில் முன்னேறி, உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். உங்களுடைய பயணத்தில் அரசாங்கமும் சமூகமும் உங்களுடன் துணை நிற்கும். மாணவர்களின் முகங்களில் தெரியும் நம்பிக்கையும் எதிர்கால கனவுகளும் இந்த நிகழ்வின் உண்மையான வெற்றி. வாய்ப்பு வழங்கப்பட்டால் மாற்றுத்திறனாளி மாணவர்களும் நாட்டின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும்

இந்த உதவித்தொகை வெறுமனே ஒரு நிதியுதவி அல்ல.

இது ஒரு மாணவரின் கல்விக் கனவுக்கு வழங்கப்படும் நம்பிக்கை.

ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்புக்கு வழங்கப்படும் பலம். ஒரு சமூகத்தின் சமத்துவமான எதிர்காலத்திற்கான முதலீடு. இந்த சிறப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வலுசேர்க்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், ஜனாதிபதி நிதியத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றுத்திறன் ஒரு தடையல்ல. வாய்ப்பு கிடைத்தால் திறமை வெல்லும். கல்வி கிடைத்தால் கனவுகள் நனவாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமை, கல்வி மற்றும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தும் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து செயலாற்றுவோம் என தெரிவித்தார்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *