கல்முனை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் முஸ்லிம் கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் தாதியர்களின் சீருடை தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைக்குக் குறுகிய கால மற்றும் நீண்ட கால ரீதியிலான நிரந்தரத் தீர்வை வழங்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று (18) காலை பாராளுமன்ற வளாகத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பில் ஆளும் கட்சியின் முஸ்லிம் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த சில நாட்களாகப் பெரும் பேசுபொருளாக இருந்த இந்தச் உணர்வுபூர்வமான விடயம் குறித்து அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்கள் விரிவாக ஆராயப்பட்டன.
வைத்தியசாலை கட்டமைப்பின் அமைதியைப் பேணுதல், ஊழியர்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதன்படி, உடனடித் தீர்வாகச் சில நடவடிக்கைகளை எடுப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாத வண்ணம் நிரந்தரத் தீர்வைச் சட்டரீதியாக அமுல்படுத்தப் போவதாகச் சுகாதார அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.




