எல் நினோ காலநிலை தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதாகவும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் உட்பட நீர் நிலைகளின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ காலநிலை ஏற்படுமாயின், அடுத்த வருடத்தின் முதலாம் காலாண்டில் நாட்டில் கடும் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
எல் நினோ தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன் அந்த வகையில் நாட்டில் தற்போது ‘எல் நினோ’ காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு, முன்னர் 63 வீதமாக காணப்பட்ட சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் தற்போது தீவிர வெப்பமான காலநிலை நிலவுவதாகவும் மத்திய மலைநாட்டுப் பகுதியிலும் அதிக வறட்சியான காலநிலை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஆரம்பித்துள்ள எல் நினோ நிலைமை, தற்போது உலகம் முழுவதும் பல காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன.
இதுவரை பதிவான மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது உருவெடுக்கக்கூடும் என சர்வதேச விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.




