இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கவும்” (Tell IGP) திட்டத்தின் மூலம், பொதுமக்கள் ஏதேனும் ஒரு சம்பவம் அல்லது முறைப்பாட்டை இணையவழியாக நேரடியாக பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில், இத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட வடிவில் செயல்படுத்தப்படுகிறது.
இச் சேவையின் மூலம், இலங்கையிலோ வெளிநாட்டிலோ வசிக்கும் எவரும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தங்களது முறைப்பாடுகள் அல்லது தகவல்களை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும்.
இந்தப் முறைப்பாடு சேவையின் மூலம், பொதுமக்கள் இலங்கையிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், பல்வேறு குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்களை நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க முடியும்.
பெறப்படும் ஒவ்வொரு முறைப்பாடுகளும் சம்பந்தப்பட்ட பிராந்திய பொறுப்பதிகாரிகளின் மூலம் உரிய பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டு, விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை எனில், அதே இணைய முறைமையின் மூலம் மீண்டும் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் http://www.police.lk என்ற இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் E-Service பகுதிக்குச் சென்று “Tell Inspector General of Police (Tell IGP)” சேவையைப் பயன்படுத்தலாம். மேலும், https://telligp.police.lk என்ற இணைய முகவரி அல்லது http://telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்பலாம்.
பொதுமக்களுக்கு மேலும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில், இத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கணினி இயக்குநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.




