ஈரான் போர்ச்சூழலில், உலகையே அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை என அழைக்கப்படும் ஏவுகணை ஒன்றை அமெரிக்கா சோதனை செய்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா நடத்திய சோதனை
அமெரிக்கா, Minuteman III ICBM என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள Vandenberg விண்வெளி படைத்தளத்திலிருந்து வீசப்பட்ட அந்த ஏவுகணை, 6,700 கிலோமீற்றர் தூரம் பயணித்து பசிபிக் பெருங்கடலைக் கடந்து மார்ஷல் தீவுகளில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை மிகச்சரியாக சென்று தாக்கியுள்ளது.
அமெரிக்காவிடம் இத்தகைய 400 Minuteman III ICBM ஏவுகணைகள் உள்ளன. அவை அனைத்தும் பூமிக்கடியில் பாதுகாப்பான இடங்களில், ஆனால், ஏவுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உலகையே அழிக்கக்கூடிய ஏவுகணை…
இந்த Minuteman III ICBM ஏவுகணைகள், உலகையே அழிக்கும் திறன்கொண்ட ஏவுகணைகள் என அழைக்கப்படுகின்றன.

ஆனால், உண்மையாகவே அவை உலகை அழிக்கக்கூடுமா என்றால், அதாவது, இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
ஆக, ஒரு நாடு அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை வீசினால், அதன் எதிராளியான நாடும் ஏவுகணைகளை வீசக்கூடும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அணு குளிர்காலம் (nuclear winter) என்னும் ஒரு நிகழ்வு உருவாகும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அதாவது, அணு ஆயுதங்கள் வெடித்ததால் உருவாகும் புகை வளிமண்டலம் வரை பயணிக்க, சூரிய ஒளி பூமிக்கு வருவது தடுக்கப்படும்.

சூரிய ஒளி தடுக்கப்படுவதால், உலகம் முழுவதும் குளிர்ச்சியடைந்து, விவசாயமும் உணவு விநியோகமும் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பஞ்சம் ஏற்படும். அதன் விளைவாக, பூமியிலுள்ள சூழல் மண்டலம் பாதிக்கப்பட்டு மனித குலமே அழியும் நிலை உருவாகலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஆகவேதான், இந்த ஏவுகணைகள் உலகையே அழிக்கக்கூடிய ஏவுகணைகள் என அழைக்கப்படுகின்றன.
விடயம் என்னவென்றால், தற்போது நிகழ்த்தப்பட்ட Minuteman III ICBM ஏவுகணை சோதனை, வழக்கமான ஒன்றுதான் என்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
ஆனால், உக்ரைன் ரஷ்யா, ஈரான் இஸ்ரேல் என பல நாடுகளுக்கிடையே மோதல் சூழல் காணப்படும் நிலையில், வழக்கமான ஏவுகணை சோதனைகள் கூட கவனம் ஈர்க்கத்தானே செய்யும்!




