6 வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தீவிரம் காட்டும் இந்தியா

3 Min Read

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவை அடுத்து, சவுதி அரேபியா முதல் ஓமான் வரையான 6 வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியா முதற்கட்ட பேச்சுவார்த்தைகளைத் துவங்கியுள்ளது.

தடையற்ற வர்த்தகம்

GCC என்பது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள ஆறு நாடுகளின் ஒன்றியமாகும். இதில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக் உள்ளது.

6 வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தீவிரம் காட்டும் இந்தியா | Gulf Nations India Free Trade Pacts

இந்த நிலையில், GCC உடனான ஒப்பந்தம் என்பது இரு தரப்புக்கும் இடையிலான தடையற்ற வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு வர்த்தகப் பங்காளிகளும் 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் வர்த்தகம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இந்த ஆறு நாடுகளில் மட்டும் 10 மில்லியன் இந்தியர்கள் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தமானது GCC நாடுகளின் உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்புக்கு, அத்துடன் இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஊக்கமளிக்கும் என்றார்.

இந்தியா உலகின் ஒரு முக்கிய உணவு தானிய உற்பத்தியாளராக இருக்கும் நிலையில், GCC நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகளாக உள்ளது.

மேலும், இரு தரப்பும் ஏற்கனவே மிகவும் வலுவான, ஏறக்குறைய 179 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏற்கனவே மே 2022 முதல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் டிசம்பர் 18, 2025 ல் ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தியா சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து பிரதானமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. மேலும், முத்துக்கள், விலைமதிப்பற்ற மற்றும் குறைமதிப்புள்ள கற்கள், உலோகங்கள், செயற்கை நகைகள், மின் இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு, மற்றும் இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

2023-24 ஆம் ஆண்டில் 56.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இந்தியாவின் GCC நாடுகளுக்கான ஏற்றுமதி, 2024-25 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் அதிகரித்து, சுமார் 57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

வர்த்தகப் பங்காளியாக

2023-24 ஆம் ஆண்டில் 105.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இறக்குமதி, 2024-25 ஆம் ஆண்டில் 15.33 சதவீதம் அதிகரித்து 121.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இருதரப்பு வர்த்தகம் 2023-24 ஆம் ஆண்டில் 161.82 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் 178.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

6 வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: தீவிரம் காட்டும் இந்தியா | Gulf Nations India Free Trade Pacts

கடந்த நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ஐக்கிய அமீரகத்திற்கான இந்தியாவின் ஏற்றுமதி 36.63 பில்லியன் அமெரிக்க டொலராகவும், இறக்குமதி 63.40 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இருந்தது.

இதன் விளைவாக, 2024-25 நிதியாண்டில் 26.76 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த நிதியாண்டில் சவுதி அரேபியா இந்தியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது.

அந்த நாட்டிற்கான ஏற்றுமதி 11.75 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இறக்குமதி 30.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தன. இதன் விளைவாக, 2024-25 நிதியாண்டில் 18.36 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *