வெனிசுலாவை தொடர்ந்து அடுத்து 3 நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி கைது
வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ(nicolas maduro) மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு வந்துள்ளது.

அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்த மதுரோ துணை புரிவதாக ட்ரம்ப் அரசு நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வந்தது.
ஆனால், வெனிசுலாவை அமெரிக்கா ஆக்கிரமிப்பதன் நோக்கம் அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக தான் என வெனிசுலா குற்றஞ்சாட்டி வருகிறது.

ஒரு நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்துள்ள விடயம் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, ஈரான், கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூயார்க் மேயர் மம்தானி மற்றும் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்(Delcy Rodriguez) இடைக்கால ஜனாதிபதியாக வெனிசுலா உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
ட்ரம்ப்பின் அடுத்த இலக்கு
இது குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “வெனிசுலாவில் அடுத்து பாதுகாப்பான ஆட்சி மாற்றம் நடக்கும் வரை, வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும். வெனிசுலாவில் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாக ஒரு சரிவில் இருந்து வருகிறது.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலா சென்று, பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து, மோசமாக சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சரிசெய்து, நாட்டிற்கு பணம் சம்பாதிக்கத் தொடங்குவோம்.
தேவைப்பட்டால் 2வது மற்றும் மிகப் பெரிய தாக்குதலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். வெனிசுலா மற்றும் கியூபாவின் நிலைமை ஓரே மாதிரியாக உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்தால், மெக்ஸிகோ, கியூபா, கொலம்பியா உள்ளிட்ட 3 நாடுகளும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என தெரிவித்துள்ளார்.




