பாதுகாப்புப்படை நிவாரண குழுக்களை நேபாளத்திற்கு அனுப்புகிறது இலங்கை

2 Min Read
  • இலங்கையர்களுக்கு உதவ 24 மணி நேரமும் தயார் நிலையில் தூதரகம்
  • அவசர உதவி இலக்கம் (977-9851048653)

நேபாளத்தில் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள படையினரடங்கிய குழுக்களை எதிர்வரும் சில தினங்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் நேபாள வெள்ளப்பெருக்கு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மேற்படி இயற்கைப் பேரழிவு ஒரு துரதிர்ஷ்டவசமான, கவலைக்குரிய சம்பவமாகும். அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் நிவாரணக் குழு மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து நேபாளத்துக்கு நிவாரணக் குழுக்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண நிலையத்தின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதுடன் அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடு என்ற வகையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்த பேரழிவின் தீவிரத்தை கருத்திற் கொண்டு இலங்கை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் செயற்பட்டு வருவதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேபாளத்திலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

திடீர் வௌ்ள அனர்த்தம் காரணமாக ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை அண்மித்த பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவையுள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் வெளி விவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக 24 மணி நேரமும் செயற்பாட்டில் உள்ள அவசர உதவி இலக்கம் (9779851048653) வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *