கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்: இனவாதமாக மாற்ற இடமளிக்க முடியாது – அமைச்சர் நளிந்த

Admin
By
Admin
2 Min Read

சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்குரிய நடவடிக்கைகளை பாராளுமன்றம் ஊடாக முன்னெடுக்கலாம். அதுவரையில் நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே செயற்பட முடியும்.இந்த விவகாரத்தை இனவாதமாக மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் ,

பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அனைவரும் பொறுப்புடனும், சிறந்த முறையிலும் செயற்பட வேண்டும். சமூக வலைத்தளங்களிலோ அல்லது வெளியில் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்வைக்கும் விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நாட்டில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். ஆகவே அனைத்து இன மக்களின் கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கை எனும் இராச்சியம் காணப்படுகிறது.

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும், அந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் கடந்த காலங்களில் இனவாதம் எனும் நீரில் பலர் நீந்திச் சென்றார்கள். தேசிய மக்கள் சக்தி இனவாதத்தை தோற்கடித்து அதிகாரத்துக்கு வந்தது. இந்த இரண்டு வருட காலத்தில் பல பிரச்சினைகளுக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளது. இனவாதிகள் இந்த விடயத்தை காற்பந்தாக பயன்படுத்த நாங்கள் இடமளிக்கவில்லை.

அரச சேவையில் ஆடை ஒழுங்கு முறைமை உள்ளது. சுகாதார சேவையில் சீருடை வழங்கப்பட்டுள்ளது.மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது. 2025.01.01 ஆம் திகதி முதல் சுகாதார சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு சீருடை கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலையில் சீருடையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பிரச்சினை சுகாதார அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும், இனவாதிகளின் நோக்கத்தை தோற்கடிப்பதற்காகவே புதிய கனிஸ்ட உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் காலத்தில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை அமைவாகவே சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய வேண்டுமாயின் அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கலாம்.அதுவரையில் நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையே அமுல்படுத்தப்படும்.

முஸ்லிம் பெண்கள் சுகாதார சேவையில் இணையும் ஈடுபாடு உயர்வாகவே காணப்படுகிறது. இதனை வரவேற்கிறோம்.தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தீர்மானம் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வு காண வேண்டும் .ஆகவே இந்த விடயத்தை இனவாத முரண்பாடாக மாற்றியமைக்கும் ஒரு தரப்பின் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *