கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக கஞ்சா செடியை பயிரிட்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



