நாட்டின் கடற்பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையில், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று இது தொடர்பில் விசேட அறிக்கையும் விடுத்திருந்தது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையான மற்றும் கற்பிட்டி முதல் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.இன்று வியாழக்கிழமை காலை 11 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடமேற்கு மாகாணத்தின் சில இடங்களில் இடைக்கிடை மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உட்பட ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வரட்சியான காலநிலையே நிலவும் எனவும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.




