தித்வா சூறாவளிப் பாதிப்புகளிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் இந்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் இதுவரை 14,850 கோடி இலங்கை ரூபாவைச் செலவிட்டுள்ளது.
இத்தொகையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன்திட்டத்தின் கீழும், மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவித் திட்டத்தின் கீழும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான இந்திய உதவித் திட்டங்கள் ஐந்து பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் பிரிவின் கீழ், சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் தெருக்கள் மீளமைக்கப்படவுள்ளன. அல்லது புதிதாக நிர்மாணிக்கப்படும். இரண்டாவது பிரிவின் கீழ் முற்றாக சேதமடைந்த மற்றும் ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் நிர்மாணம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட சுகாதார மற்றும் கல்விக் கூடங்களின் புனரமைப்புக்காக செலவிடப்படவுள்ளது. நான்காவது பாதிக்கப்பட்ட விவசாய காணி புனரமைப்பின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஐந்தாவது பிரிவின் கீழ் எதிர்கால இயற்கை அனர்த்தங்களுக்கு எவ்வாறு வெற்றிகரமாக முகம் கொடுப்பது என்பதற்கான ஏற்பாடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த உதவித் திட்டங்கள் தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. சில வாரங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் திட்டங்கள் மற்றும் சேவைகள் தேவைப்படும் போதெல்லாம் பெற்றுத்தரப்படும் என்றும் இந்திய தூதரக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
இதேசமயம் இந்திய உதவியின் கீழ் சம்பூர் மின் திட்டம், டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை தயாரிப்பு, கொழும்பு துறைமுக மேற்கு இறங்குதுறை நிர்மாணம் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா பங்களிப்பு செய்து வருகிறது.




