இலங்கையில் அமையவுள்ள பாராளுமன்ற வரவு செலவு அலுவலகம்

4 Min Read

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை (House Democracy Partnership/HDP) மற்றும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகம் (Congressional Budget Office (CBO)) ஆகியவற்றுடன் இணைந்து “பாராளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட மற்றும் பொருளாதார பகுப்பாய்வுகளை வலுப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் 2026ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் 12 ஆம் திகதி வரை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

நிதி மேற்பார்வை, வரவுசெலவுத்திட்ட பகுப்பாய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கைவகுப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தின் திறனை வளர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், இலங்கை பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இது தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக அமைந்தது.

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் மேகன் மூர், அமெரிக்க காங்கிரஸ் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தின் மேகன் கரோல் மற்றும் கிரிஸ்டி ஹவ்லே அன்டனி ஆகியோர் இதில் பங்கெடுத்தனர். அத்துடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுரகத்தின் துணைத் தூதுவர் ஜென் ஹோவெல் உள்ளிட்ட தூதுரகத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் இணைந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற குழுக்களின் பணியாளர்கள், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிர்வாகம் தொடர்பான அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்தத் தூதுக்குழுவினர் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரைச் சந்தித்து பாராளுமன்றத்தின் கண்காணிப்புக்களை வலுப்படுத்தல், நிறுவன ரீதியான திறன்களை மேம்படுத்தல் மற்றும் ஆதார அடிப்படையில் நிதி ரீதியான முடிவுகள் எடுக்கப்படுவதை ஊக்குவித்தல் ஆகியவை குறித்துக் கலந்துரையாடினர். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொதுமக்களின் பங்கேற்பு, திறம்பட்ட குழு கண்காணிப்பு மற்றும் பாராளுமன்ற ஆதரவு சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை – அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் அனுசரணையுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்கான அறிமுக அமர்வு இடம்பெற்றது. குறித்த சங்கத்தின் தலைவர் கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களில் பணியாற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இங்கு, அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தின் நிறுவனப் பங்கு மற்றும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கக் குழுவினர் விளக்கமளித்தனர். பாராளுமன்ற வரவுசெலவுத் திட்டச் செயன்முறைக்கான ஒத்துழைப்பு ஆதரவு, சட்டமூலங்களுக்கான செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல், வரவுசெலவுத் திட்டம் மற்றும் பொருளாதார முன்னறிவிப்புகளைத் தயாரித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பாரபட்சமின்மை ஆகிய கொள்கைகள் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வின் அமர்வுகளில் நிதி மேற்பார்வை, வரவுசெலவுத் திட்ட ஆய்வு, பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் பாராளுமன்ற வலவுசெலவுத்திட்ட நிறுவனங்கள் தொடர்பான சர்வதேச நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. பாராளுமன்றக் குழுக்களின் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், பகுப்பாய்வின் வழிமுறைகள், ஆராய்ச்சி ஆதரவுப் பணிகள், வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, அத்துடன் பாராளுமன்றத்திற்கும் மேற்பார்வை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உத்திகள் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கி அழைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க தூதுக் குழுவினர் அக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இலங்கையின் பாராளுமன்ற நிதி மேற்பார்வை வழிமுறைகள் மற்றும் பங்குதாரர் ஈடுபாட்டு செயல்முறைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் தூதுக்குழுவினர் பெற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில், இலங்கையில் பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகத்தை நிறுவி நடைமுறைப்படுத்துவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு அடிப்படைத் திட்டத்தை வகுப்பதற்காக சுருக்கமான செயலமர்வொன்றும் நடத்தப்பட்டது.

அரசாங்க நிதி மேற்பார்வை மற்றும் வரவுசெலவுத் திட்டப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதில் இந்தத் தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் ஒரு முக்கியப் படியாக அமைந்தது. மேலும், பொறுப்புக்கூறக்கூடிய, வெளிப்படையான மற்றும் ஆதார அடிப்படையிலான ஆளுகையை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை பாராளுமன்றத்திற்கும் அதன் சர்வதேசப் பங்காளிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *