புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்துக்கு மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறைக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஊசி மருந்துக்கும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகளுக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்துக்குள்அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இல் தமிழரசுக்கட்சி எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’ ஊசிமருந்து, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட பல அரச வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக உள்ளதாக நோயாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தம்மிடம் தெரிவித்துள்ளதாக சாணக்கியன் எம்பி சபையில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இதுசாதாரணமான ஒரு மருந்துப் பற்றாக்குறை பிரச்சினை அல்ல என்றும், புற்றுநோயாளர்களின் உயிருக்கும் அவர்களது சிகிச்சையின் தொடர்ச்சிக்கும் நேரடியாகத் தொடர்புடைய முக்கியமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து தற்போது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைஉள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளதா – இல்லையா என்பதை சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் சாணக்கியன் எம்.பி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த ஊசி மருந்துக்கும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




