வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் புதிய திருத்தத்தின்படி, 30 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாகவும் அத்துடன் அதிகபட்ச பஸ் கட்டணமான 2,422 ரூபாவானது 480 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 2,902 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பஸ் கட்டணத்திருத்தம் வழமையாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இம்முறை நேற்று முன்தினம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அது அதிகரிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
அது தொடர்பில் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பஸ் கட்டண திருத்தம் நாடு முழுவதுமுள்ள தனியார் மற்றும் அரச பஸ்கள் ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் அமுலுக்கு வந்துள்ளன.
நகர்ப்புற, கிராமப்புற மற்றும் சுமார் 3,000 தூரசேவை பஸ்கள் உட்பட சொகுசு பஸ் சேவைகள் அனைத்தினதும் கட்டணங்கள் நூற்றுக்கு 12 வீதத்தால் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த கட்டணங்களை கணக்கிடும் போது
முரண்பாடான தன்மையைக் கையாண்டுள்ளது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சதவீத அடிப்படையில் கட்டணங்களை பிரித்து வழங்கியது இடம்பெறவில்லை.
இடைப்பட்ட தூரங்களுக்கு வெவ்வேறு சதவீதங்கள் கணக்கிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் டீசல் விலை குறைந்தாலும் இந்த நடைமுறையினால் குறுகிய தூர பஸ் கட்டணங்களை எவ்விதத்திலும் குறைக்க முடியாது போகும்.




