கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் (Cricket Transformation Committee) தலைவரான எரான் விக்ரமரத்ன, தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் (RDICS) உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக விசேட ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அவர் மைதான வளாகத்தை ஆய்வு செய்துகொண்டிருந்த வேளையில், அங்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர் கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1ஆம் நிலை பயிற்சியாளர்களுக்கான விசேட கல்வித் திட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
தனது விஜயத்தின் போது பயிற்சி நடைபெறும் இடத்திற்குச் சென்ற எரான் விக்ரமரத்ன, அதில் கலந்துகொண்டுள்ள இளம் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.
இலங்கையின் அடிமட்ட கிரிக்கெட் (Grassroots Cricket) மற்றும் பாடசாலை கிரிக்கெட் மட்டத்தை வலுப்படுத்துவதற்கு இத்தகைய உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர் கல்வித் திட்டங்கள் எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்தும், எதிர்கால கிரிக்கெட் மறுசீரமைப்புத் திட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய ஆலோசனைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.




