O/L, A/L மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோக பணிகள் துரிதம்

1 Min Read

2026ஆம் ஆண்டில் O/L மற்றும் A/L ஆகிய தேசியப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் அதிவேகமாகத் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருட இறுதிக்குள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கி முடிப்பதற்குத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் ஜெகத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பப் படிவங்களைச் சேகரித்து, ஆட்கள் பதிவுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் ஊடாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, அதிபர்கள் தங்களது பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஓகஸ்ட் மாதத்தில் A/L பரீட்சைக்குத் தோற்றவிருக்கும், இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள், ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (drp.gov.lk) குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகத் திணைக்களத்தைத் தொடர்புகொண்டு தங்களது விபரங்களை உடனடியாக அறியத்தர முடியும். அவர்களுக்கான அடையாள அட்டைகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்கப்படும். அடையாள அட்டை விநியோகத்தில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் போவதைத் தடுக்கும் நோக்கிலேயே இம்முறைமைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *