நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்டு, வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப் பொருட்கள் மற்றும் ஒரு தொகை போதை மாத்திரைகள் என்பன நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை புத்தளம் வண்ணாத்தவில்லு, லக்டோ வத்தை பகுதியில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரினால் கைப்பற்றப்பட்டு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப் பொருட்களும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களினால் அழிக்க உத்தரவிடப்பட்ட போதைப் பொருட்கள் என்பனவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப் பொருட்கள் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம்-வண்ணாத்திவில்லு லக்டோ வத்தை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்பட்டன.
இதன் போது நீர்கொழும்பு பிரதம நீதிவான் ஷீலானி பெரேரா மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.ஜே.கே. தஹனக, ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவிப் பணிப்பாளர் கோகிலா அதவுட, ஆனமடு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.எச். மீல்லகே ஆகியோர் முன்னிலையில் குறித்த போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.




