‘Ceylon Tea Village’ 500 கொத்துத் தேயிலை கிராமத் திட்டம் ஆரம்பம்

1 Min Read

2030 ஆம் ஆண்டளவில் உலர் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கி.கிராமாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலர்களாகவும் உயர்த்துவதற்கான தேசிய இலக்கை முன்னிறுத்தி, “Ceylon Tea Village” 500 கொத்துத் தேயிலை கிராமத் திட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று (24) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக சிறு தோட்டத் தேயிலை விவசாயிகளின் வருமான நிலையை உயர்த்துதல், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்திகளை மேம்படுத்துதல், தேயிலை கைத்தொழிலை சுற்றுலாத்துறையுடன் இணைத்தல், நவீன பயிர்ச்செய்கை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேயிலை கிராமங்கள் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டிற்குள் 14 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் 144 தேயிலை கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இக்கிராமங்களைத் தேர்ந்தெடுக்கும் போது எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி விஞ்ஞானபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக இங்கு வலியுறுத்தப்பட்டது.

தேயிலை விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவூட்டி, இலங்கையின் தேயிலை கைத்தொழிலை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்வதற்கு இந்த வேலைத்திட்டம் ஒரு முக்கிய படியாக அமையும்.

இந்நிகழ்வில் பெருந்திரளான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தேயிலைச் சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தேசிய பெருந்தோட்ட மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம், களுபோவிட்டியான தேயிலை தொழிற்சாலை நிறுவனம் ஆகியவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *