சம்பள முரண்பாடுகளை தீர்க்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

1 Min Read

இலங்கையில் பல ஆண்டுகளாக அரச சேவையில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகள் மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் “சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு” ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (22) 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரச சேவையை நவீனமயப்படுத்துதல் மற்றும் ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள சம்பள முரண்பாடுகளுக்கு நிலையான தீர்வுகளைப் பரிந்துரைத்தல், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையை மாற்றியமைத்தல், ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்குதல், தகுதியான நபர்களை அரச சேவைக்கு ஈர்ப்பதற்கும், ஊழியர்களைத் தக்கவைப்பதற்கும் ஏற்ற ஊக்குவிப்புத் திட்டங்களை உருவாக்குதல் போன்றன ஆணைக்குழுவின் முக்கிய பணிகளாக கருதப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக தெல்கே அஷோக் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் திரு. என். ரவிச்சந்தர் உட்பட 15 உறுப்பினர்கள் இந்த ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஆணைக்குழுவின் செயலாளராக டி.எம்.சி. நாலக திஸாநாயக்க செயற்படுவார்.

இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை ஓர் ஆண்டிற்குள் (01 வருடம்) நிறைவு செய்து ஜனாதிபதியிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசு அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த புதிய மறுசீரமைப்பின் மூலம், பிரஜைகளை மையமாகக் கொண்ட வினைத்திறனான அரச சேவை எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *