17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

3 Min Read

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது பிரபலத்திற்காகவோ எடுக்கப்படவில்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையின் முன்னேற்றத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும், எந்தவொரு அரசியல் இலாபத்திற்காக அல்லது புகழுக்காகவும் தீர்மானங்கள் எடுக்கப்படமாட்டாது என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

காசல் வீதி மற்றும் சொய்சா மகளிர் வைத்தியசாலைகள், மகாமோதர போதனா வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை மற்றும் மாத்தறை அரச வைத்தியசாலை உள்ளிட்ட 17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் இந்த பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

இதன் போது, காசல் மகளிர் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக சி.டி.யு.எம். ரங்கா, டி சொய்சா மகப்பேறு (போதனா) வைத்தியசாலையின் பணிப்பாளராக சி. பெரேரா, மகாமோதர போதனா வைத்தியசாலையின் (ஜெர்மன் இலங்கை நட்புறவு மகளிர் வைத்தியசாலை) பணிப்பாளராக சி.எம். சோமரத்ன, தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக சி.ஐ. குருகுலசூரிய, மாத்தறை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக சி.பி. ரணசிங்க அமைச்சரால் நியமிக்கப்பட்டனர்.

மேலும், சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ்.பண்டார, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன், பதுளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.டி.கே. அத்தநாயக்க, புத்தளம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பி.ஏ.டி.டி.எஸ். பொன்வீர, கண்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ. ஏ. எஸ். எஸ். விக்ரம, மொனராகலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். டி. ஏ. பி. செரசிங்க, களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சி. முரகே, வடமேல் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்தியர் பி .கயல்விழி, மனநலப் பணிப்பாளர் வைத்தியர் இ. ராஜபக்ச, மலேரியா ஒழிப்புப் பணிப்பாளர் வைத்தியர் ஜே.கே.எம்.என். ஜயகோடி, தொழுநோய் ஒழிப்புப் பணிப்பாளர் வைத்தியர் ஜே.எம்.எஸ்.ஏ. ஜயசிங்க, மற்றும் உணவு நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் என்.எச். தர்மதிலக்க ஆகியோரும் அமைச்சரிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், நியமிக்கப்பட்டவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த நியமனத்தை சுகாதார சேவையில் ஒரு முன்னேற்றப் படியாகக் கருதலாம் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக வழங்கப்பட்ட 9 உதவித் தலைமை பணிப்பாளர் நியமனங்களும் மேலும் இந்த 17 பணிப்பாளர் நியமனங்களும் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளால் சரியான முறையில் தெரிவுசெய்யபட்டவையாகும். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், ஒரு கொள்கை மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

திணைக்களத்தின் தலைவர் தனது பணியை சரியான நோக்கத்துடன் செய்தால், நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அமைச்சர் மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

முடிவுகள் எதிர்காலத்திற்காக எடுக்கப்படுகின்றன என்றும், புதிய இயக்குனர்களுக்கு தற்போது பொருத்தமான சூழல் நிலவுகிறது என்றும், இது தொடர்பாக எந்த அரசியல் தலையீடும் செய்யப்படாது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்களான ஜனக கித்சிரி குணவர்தன, சமிகா எச். கமகே, கே. பி. யோகச்சந்திரா, பிரதி பணிப்பாளர் நாயகம் (இரசாயன சேவைகள்) வைத்தியர் அர்ஜுன திலகரத்ன, பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *