அவுஸ்திரேலியாவுக்கான சரக்கு கப்பல் ஒன்று உரிமையாளர் யார் என்பதை மறைத்து சாமர்த்தியமாக ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா உரிமையாளர்
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவில் சிக்கியிருந்த Iron Maiden என்ற கப்பல், வியாழக்கிழமை அன்று பெர்த் துறைமுகத்தில் நங்கூரமிட உள்ளது.

மார்ச் 2 அன்று துபாயில் சரக்குகளை இறக்கிய பிறகு, Iron Maiden கப்பல் ஆயிரக்கணக்கான பிற கப்பல்களுடன் சேர்ந்து ஹார்முஸ் நீரிணையை நோக்கிச் சென்றுள்ளது.
ஆனால், போர் சூழல் காரணமாக அந்தக் கப்பல் இரண்டு நாட்கள் அங்கே முடங்கியுள்ளது. மார்ச் 4 ஆம் திகதி ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முடிவு செய்த அந்த ஜப்பான் உரிமையாளரின் கப்பல், ஈரான் தரப்புக்கு அது சீனா உரிமையாளரின் கப்பல் என அறிவித்துவிட்டு, ஆபத்தை எதிர்கொள்ள தயாரானது.
இரவு நேரம் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் புறப்பட்டு ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முடிவு செய்துள்ளது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அந்த நீரிணையைக் கடக்கும் வரையில் அதன் கண்காணிப்பு சமிக்ஞையை அணைத்து விட்டது.
மறு பக்கம் கப்பல் நுழைந்ததன் பின்னரே, கண்காணிப்பு சமிக்ஞைகள் மீண்டன. ஈரான் தரப்பு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளின் கப்பல்களுக்கே ஹார்முஸ் நீரிணையில் அனுமதி அளித்து வருகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் திரவ எரிவாயு கப்பலான Bogazici இஸ்லாமியருக்கு சொந்தமான கப்பல் என்றும், துருக்கி உரிமையாளர் எனவும் தெரிவித்து, ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியப் பெருங்கடலுக்கு வந்தது.
அவுஸ்திரேலிய கடற்பகுதி
தற்போது ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ள Iron Maiden கப்பலும் மார்ச் 17 அன்று சிங்கப்பூருக்கு சென்றதுடன், மார்ச் 24 அன்று மேற்கு அவுஸ்திரேலிய கடற்பகுதிக்கு நுழைந்துள்ளது.

குறித்த கப்பலானது குவினானா துறைமுகத்திற்குச் செல்கிறது என்றே தெரிய வருகிறது. ஈரான் மீதான போர் தொடங்கியதன் பின்னர் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து அவுஸ்திரேலியாவிற்கு வரும் முதல் கப்பல் இதுவென்றே கூறுகின்றனர்.



