ஈரானின் புதிய உயர் தலைவருக்கு என்னவானது, எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளிவரும் நிலையில், அவர் ரகசியமாக மாஸ்கோவிற்கு சென்றுள்ள தகவல் கசிந்துள்ளது.
புடினின் அழைப்பு
அவசரக் கால் அறுவை சிகிச்சைக்காக அவர் மாஸ்கோவிற்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அவரது தந்தை ஆயத்துல்லா அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 56 வயதான மொஜ்தபா காமெனி, ஈரானின் உயர் தலைவர் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால், படுகாயமடைந்துள்ள மொஜ்தபா கோமா நிலையில் இருப்பதாகவும், அல்லது அவர் இறந்துவிட்டார் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, விளாடிமிர் புடினின் தனிப்பட்ட அழைப்பின் கீழ் அவர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக குவைத் செய்தி ஊடகமான Al-Jarida தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய இராணுவ விமானத்தில், மிக ரகசியமாக அவர் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளார். மட்டுமின்றி, விளாடிமிர் புடினின் ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கிய வட்டாரத்தில்
மொஜ்தபா ரஷ்யாவிற்கு சென்றுள்ள தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், புதிய உயர் தலைவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே குறித்த தகவல் கசிந்துள்ளதாகவும் Al-Jarida குறிப்பிட்டுள்ளது.
போரின் தொடக்கத்தில் படுகாயமடைந்த மொஜ்தபா, இந்த நெருக்கடியான சூழலில் உள்நாட்டில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. அலி காமெனி கொல்லப்பட்ட அன்றே மொஜ்தபாவும் காயமடைந்தாரா என்பது தொடர்பில் தகவல் இல்லை.

இந்த நிலையில், மொஜ்தபா காயமடைந்திருப்பதை நம்புவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
ஈரானிய அதிகாரிகளும், மொஜ்தபா காயமடைந்துள்ளதை உறுதி செய்தாலும், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர். இதனிடையே, போர் தொடர்பில் மொஜ்தபா முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் பின்னரே, ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்தது என்பதையும் நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.




