பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பசிலான் மாகாணம் அருகே 350-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற MV Trisha Kerstin 3 என்ற படகு திங்கட்கிழமை அதிகாலை மூழ்கியது.
இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு சாம்போங்கா துறைமுகத்தில் இருந்து ஜோலோ தீவுக்கு பயணித்துக் கொண்டிருந்தது. இதில் 332 பயணிகள் இருந்துள்ளனர், அத்துடன் படகு குழுவினர் 27 பேர் இருந்ததாக பதிவாகியுள்ளது.
இரவு 1.50 மணியளவில் படகு அவசர சிக்னல் அனுப்பியுள்ளது.
பின்னர் படகு பசிலான் மாகாணத்தின் பலுக்-பலுக் தீவுக்கு அருகில், கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மூழ்கியுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள்
316 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 28 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
கடற்படை, விமானப்படை மற்றும் கரையோர காவல்படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பலர் மருத்துவ உதவிக்காக இசபெலா நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சவால்கள்
மீட்கப்பட்டவர்களில் பலர் முதியவர்கள் என்பதால் அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.
மருத்துவமனைகளில் பணியாளர்கள் குறைவாக இருப்பதால் சிகிச்சை வழங்குவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் இதுபோன்ற படகு விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. புயல்கள், பராமரிப்பு குறைபாடுகள், அதிகப்படியான பயணிகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாதது முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.




