நேபாளத்தில் திடீரென பாரிய வெள்ளம் ஏற்பட்டதால் திபெத்தின் எல்லையில் உள்ள ஒரு பகுதியில் வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளதோடு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இவ்வெள்ள நிலையினால் சுமார் 50 ஆயிரம் சனத்தொகை கொண்ட ரசுவா மலை மாவட்டத்திலுள்ள சியாப்ரு பெசி மற்றும் திமுரே பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
போட் கோஷி ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான மேட்டு நிலப்பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகி நரேந்திர பரியார் கூறுகையில், கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டதாக எங்களிடம் அறிக்கைகள் உள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் அல்லது சொத்து இழப்புகள் குறித்து உடனடி மதிப்பீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. உயிரிழப்புகள் அல்லது சொத்து இழப்புகள் இருக்கலாம் என்றுள்ளார்.
இத்தகைய சேதங்கள் காரணமாக அந்தப் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரொய்ட்டர்ஸ்




