இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள எரிக் எஸ். மயர் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக கொழும்பிலிருந்து பணிபுரியவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தமக்குக் கிடைத்த சிறந்த கௌரவமெனவும்
தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் பலமான ஜனநாயக அத்திவாரத்தின் அடிப்படையில் நல்லுறவுகளை மேலும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான வர்த்தக நடவடிக்கைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் அதிகரித்த நன்மைகளை வழங்கும் வகையில் அமெரிக்க-இலங்கை பங்களிப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெறுவதற்கு முன்னர் இவர், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகச் சேவையாற்றியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் அவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




