நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினை அரசியலமைப்பைத் திருத்தம் செய்வதா அல்லது நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதா என்பதல்ல. நாடு சர்வதேச ரீதியாக பெற்றுள்ள கடன்களை மீளச் செலுத்துவதே தற்போது எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
”அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் தற்போது விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும், நாட்டின் கடன் மீளச் செலுத்துதல் தொடர்பான முக்கியமான விடயம் இதுவரை போதியளவில் கலந்துரையாடப்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கமும் அரசியல் தரப்புகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை பெற்றுள்ள கடன்களை உரிய முறையில் மீளச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லக்கூடும். மேலும், 2028 ஆம் ஆண்டளவில் இலங்கை சுமார் 15 பில்லியன் ரூபாவை திரட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக கடன் மீளச் செலுத்தும் திறன் காணப்படுகிறது.இதனால், இது தொடர்பில் உடனடியாக விரிவான கவனம் செலுத்தப்பட வேண்டும்.” எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.




