இந்தியாவின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) கொண்டு வரப்படவுள்ள புதிய திருத்தங்கள், நாட்டின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் இந்தச் சட்டத் திருத்தம் தேசிய பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என்று வலியுறுத்தும் நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இது குடிமைச் சமூகத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என்று எச்சரித்துள்ளன.
புதிய திருத்தங்களின்படி, வெளிநாட்டு நிதியைப் பெறும் அரசு சாரா நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அவற்றின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் புதிதாக உருவாக்கப்படும் அமைப்புக்கு வழங்கப்படலாம். இதனால் ஆயிரக்கணக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதாபிமான சேவைகளை வழங்கும் அமைப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்திய அரசாங்கம் இந்தச் சட்டம் வெளிநாட்டு நிதியின் பயன்பாட்டை கண்காணித்து, தேசிய நலனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்க உதவும் என்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பல ஜனநாயக நாடுகளிலும் நடைமுறையில் உள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மறுபுறம், மனித உரிமை அமைப்புகள் இந்தத் திருத்தங்கள் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைப்புகளை உருவாக்கும் உரிமை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 22,000 அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறும் உரிமையை இழந்துள்ளதாகவும், புதிய விதிமுறைகள் குடிமைச் சமூகத்தின் செயல்பாடுகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, அது தற்போது இந்திய பாராளுமன்றத்தின் கூட்டுக் குழுவின் மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.




