ஜெர்மனியின் தலைநகரில் நேற்று முன்தினமிரவு நடந்த பெர்லினின் பெருமை நிகழ்வில் பங்குபற்றியிருந்த சனக்கூட்டத்தின் மீது காரை மோதியதில், ஒரு பெண் உயிரிழந்ததோடு 16 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்காரை செலுத்திய சந்தேக நபரை தேடி தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், கிறிஸ்டோபர் தெரு தினம் என்று அழைக்கப்படும் இந்த வருடாந்த நிகழ்விற்காக, பிராண்டன்பர்க் வாயிலுக்கு அருகிலுள்ள டியர்கார்டன் பூங்காவில் இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
உள்ளூர் நேரப்படி சுமார் 22:00 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. தலைநகரில் நடந்த பிரைட் நிகழ்வில் கூட்டத்தின் மீது ஒரு வெள்ளை நிற வாகனம் மோதியதாக பெர்லின் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் சிலர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் பிரைட் நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனம் மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடித்ததாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் இஸ்லாமியத் தொடர்புகள் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பொலிஸார் பதிவிட்டுள்ளனர்.
பி.பி.சி, ரொய்ட்டர்ஸ்




