மெட்ரோ பஸ் சேவைகளை வட மாகாணத்தில் அடுத்த வருடம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், தமிழரசுக் கட்சி எம்பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சத்தியலிங்கம் எம்பி தமது கேள்வியின் போது, வடமாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் வசிக்கின்றனர். மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் சூழல் நிலவுவதால் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை நடத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ பஸ் சேவைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.




