மலேசியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் சிகரெட்டுகளை கடத்த முயன்ற வெளிநாட்டு வர்த்தகர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சத்து 8,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சீன நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோருடன் ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களான இவர்கள் மூவரும், நேற்று (30) அதிகாலை 02:00 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ‘ஏர்ஏசியா’ (AirAsia – AK-047) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் ‘கிரீன் செனல்’ (Green Channel) வழியாகத் தாங்கள் கொண்டு வந்த பொருட்களின் விபரங்களை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அவர்கள் வெளியேற முயன்றனர். அப்போது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.




