பிரித்தானியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள அண்டி பர்ன்ஹாம் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நேற்று உக்ரைனுக்கு விஜயம் செய்தார்.
உக்ரைன் சென்றடைந்த பிரித்தானிய பிரதமரை உக்ரைன் வௌிவிவகார அமைச்சர் அன்ட்ரீ சைபிஹா வரவேற்றுள்ளார்.
சோவியத் ரஷ்யாவில் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற 35 வருட நிறைவை குறிக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய பிரதமரின் விஜயம் இடம்பெற்றுள்ளது.
இவ்விஜயத்தின் போது பிரித்தானியாவின் ஸ்டார்ம் ஷேடோ குரூஸ் ஏவுகணையின் சொந்த மாதிரிகளை உக்ரைன் தயாரிக்கத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தையும் நீண்ட தூர ஏவுகணைகளின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியாவின் ஆதரவையும் அவர் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் குழுவான, ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’ எனப்படும் அமைப்பின் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்குவதற்காக பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் நேற்று உக்ரைனுக்கு விஜயம் செய்தார். அங்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்த ஏவுகணைக்காக, பிரான்சும் உக்ரைனும் உள்நாட்டில் உற்பத்தித் தளங்களை அமைக்க இது உதவும் என தெரிவித்துள்ளது.உக்ரைனின் பாதுகாப்பே நமது பாதுகாப்பு, என்று பர்ன்ஹாம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளதோடு எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலத்திற்கும் பிரிட்டன் உக்ரைனுக்குத் துணை நிற்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரொய்ட்டர்ஸ், பி.பி.சி




